வணக்கம்!
கதைகள் என்றாலே குட்டிஸ் முதல் வயதானவர்கள் வரை விரும்பக்கூடிய ஒன்று, பிறருக்கு கதை சொல்லும் போதும் சரி மற்றவரிடம் இருந்து கதை கேட்க்கும் போதும் சரி அது ஒரு ஆர்வம்முள்ள பொழுதுபோக்காக இருக்கிறது. இவ்வளுவு ஏன் கோலிவுட் தொடங்கி ஹாலிவுட் வரை கொண்டாடப்படும் திரைப்படங்கள் நல்ல கதையினால் என்ற கூற்றை மறுக்க முடியாது.
மனிதனின் கற்பனை பசிக்கு கதைகள் பெரும் பங்கு வகிக்கிறது. கற்பனையின் உச்சம் ஹாலிவுட் படத்தில் மட்டும் இல்லை 3000 ஆண்டுகளுக்கு முன்னாள் எம் தமிழ் புலவர்கள் வெறும் 10-15 அடி பாடலில் பாடி நின்ற இடத்தில் இருந்து உலகம் பதினான்கயும் சுற்றி காட்டும் வல்லமை படைத்தவர்கள். அப்படி கற்பனையின் உச்சம் செல்லும் செய்யுளில் ஒன்றை உங்களிடம் பகிர்கிறேன்.
அது தமிழ் கடவுளான முருகனின் “பெரியது எது?” என்ற கேள்விக்கு பதில் சொன்ன ஒளவையின் பாடல்…
பெரியது கேட்கின் எரிதவழ் வேலோய்!
ஒளவையார்
பெரிது பெரிது புவனம் பெரிது;
புவனமோ நான்முகன் படைப்பு;
நான்முகன் கரியமால் உந்தியில் வந்தோன்;
கரிய மாலோ அலைகடல் துயின்றோன்;
அலைகடல், குறுமுனி அங்கையில் அடக்கம்;
குறுமுனியோ கலசத்தில் பிறந்தோன்;
கலசமோ அரவினுக்கு ஒருதலைப் பாரம்;
அரவோ உமையவள் சிறுவிரல் மோதிரம்;
உமையோ இறைவர் பாகத்து ஒடுக்கம்;
இறைவரோ தொண்டர் உள்ளத்து ஒடுக்கம்;
தொண்டர் தம்பெருமை சொல்லவும் பெரிதே!
பொருள்:
பெரியது எது என்று கேட்கும் முருகா உலகில் மிகப்பெரியது எது என்று கேட்டால், இந்த உலகம்தான் பெரியது. ஆனால் இந்த உலகமோ பிரம்மனால் படைக்கப்பட்டது. எனவே பிரம்மன் பெரியவன் என்றால் ப்ரம்மனோ திருமாலின் தொப்புளில் பிறந்தவன். திருமால்தான் பெரியவன் என்றால் திருமாலோ அலைகடலில் தூங்குபவன். திருமாலைத் தாங்கும் கடல்தான் பெரியது என்றால், அந்தக் கடலும் அகத்தியனின் உள்ளங்கையில் உள்ள கலசத்தில் அடங்கியது. எனவே அகத்தியர்தான் பெரியவர் என்றால், அந்த அகத்தியரும் சிறு மண்குடதில் அடங்கி இருந்தவர். எனவே, குடம் தான் பெரியது என்றால் அந்தக் குடமோ இந்தப் பூமியில் உள்ள சிறு மண்ணால் செய்யப்பட்டது. எனவே, பூமிதான் பெரியது என்றால், இந்தப் பூமியை ஆதிசேஷன் என்னும் பாம்பு தனது ஒரு தலையில் தாங்கியிருக்கிறது. பூமியைத் தாங்கும் ஆதிசேஷன் என்னும் பாம்புதான் பெரியது என்றால் அந்தப் பாம்பை, உமையவள் தனது விரலில் மோதிரமாக அணிந்துள்ளாள். எனவே உமையவள்தான் பெரியவள் என்றால், அந்த உமையவளோ சிவனது உடலின் ஒரு பாதியில் ஒடுங்கியிருக்கிறாள். எனவே சிவன்தான் பெரியவன் என்றால், அந்தச் சிவனோ அடியவர்களின் உள்ளத்தில் ஒடுங்கியிருக்கிறான். எனவே அடியவர்களின் பெருமைதான் (மனம்) உலகில் பெரியது என்கிறார் ஒளவை.
ஒளவையின் தமிழ் புலமைக்கு அளவுகோல் ஏது… இன்னும் இதுபோன்ற பல தகவளுடன் மீண்டும் சந்திக்கிறேன்.